Monday, August 17, 2015

முகவீணை


முகவீணை என்பது வீணையைப் போன்ற தந்தி வாத்தியம் அல்ல. அது ஒரு துளையிசைக் கருவி. தற்போது பெரும்பான்மையாக புழக்கத்தில் இருந்து வரும் பாரி நாகஸ்வர இசைக்கருவியின் மிக மூத்த ஆதி வடிவமே முகவீணை என ஒரு சிலரால் கருதப்படுகிறது. இக்கருவிக்குத் தண்டுப் பகுதியான இடத்தில் எட்டு துவாரங்கள் உண்டு. சுமார் ஒண்ணரை அடி நீளம் கொண்டது. இதைவிட அரை அடி உயரம் கூடுதலானது திமிரி நாகஸ்வரம். அதனையும்விட சற்று நீளமானது பாரி நாகஸ்வரம். முற்காலத்தில் அதன் நீளம் ஏன் மிகவும் குறைவாக வடிவமைக்ப்பட்டது?
அந்தக் காலத்தில் மின் சாதன வசதிகள் ஏதும் இல்லை. அதனால், கோயிலில் அர்த்தஜாம பூஜையின்போது, ஒரு கலைஞர் முகவீணையைப் பிடித்து வாசித்தார் என்றால், அதன் இசையொலி சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குள் நுழைந்து சுழன்றடிக்கும். கருவியின் நீளம்தான் குறைவே தவிர, அதிலிருந்து வெளிப்படும் ஒலியின் அளவு மிகமிக அதிகம்.
இதோ அர்த்தஜாம பூஜை. முகவீணை இசை அதிர பள்ளியறைக்கு எழுந்தருளப் போகிறார் எங்கள் சுவாமி. ஊர் மக்களே வந்து தரிசியுங்கள். நீங்களும் தரிசித்துவிட்டு துயில் கொள்ளச் செல்லுங்கள் என்று சொல்லாமல் சொல்லி இசைக்கப்படுகிறது முகவீணை.
ஒலிபெருக்கி வசதிகள் வரத் தொடங்கிய காலங்களில் எட்டு ஊருக்கு அதிரும் முகவீணை ஓசை தேவையற்றுப் போனது. அதன் நீளத்தை படிப்படியாக உயர்த்தி, ஓசை குறைத்து மின் சாதனக் கருவிகள் வாயிலாக அதன் ஒலியினைத் தேவைக்கேற்ப கூட்டி அல்லது குறைத்து வைத்துக் கொள்ள நேர்ந்தபோது நாகஸ்வரம் எனப் பெயர் மாற்றம் பெற்று, அதன் வடிவத்திலும் கூடுதல் நீளத்துக்கு வடிவமைக்கப்பட்டது. மிகவும் புராதன இசைக்கருவியான முகவீணை தற்போது புழக்கத்தில் இல்லாதபோதிலும், அத்தனை எளிதாக அதனைப் புறந்தள்ளிவிட முடியாது.
இந்த இசைக்கருவியானது வீணைக்கு இணையாக நாதம் பேசக் கூடியது. வீணையைப் போல இதுவும் நாதமுகம் கொண்டிருப்பதால் இது முகவீணை என அழைக்கப்பட்டு வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.  பெருமாள் கோயில்களில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையின்போது ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி போன்ற ராகங்களை முகவீணை மூலம் இசைப்பார்கள்.
குறிப்பிட்ட சில சிவன்கோயில்களிலும், சுவாமி மலை உள்ளிட்ட சில முருகன் கோயில்களிலும் முகவீணை வாசிக்கப்பட்டுள்ளது. நாகஸ்வர இசைக் கலைஞர்களே இதனையும் வாசித்துள்ளனர். இதற்குப் பக்கவாத்தியமாக சுத்தமத்தளம், நட்டுவாங்கம் ஆகியன சேர்ந்திசைக்கப்படுகின்றன. மன்னர்கள் காலத்தில் கோயில்களில் இறைவனுக்கான இரவு நேர பூஜையின் போது, முகவீணை இசையுடன் நிகழும் ஆடல்- பாடல் காட்சிகள் அதியற்புதம். சுத்தி மத்தளம் வாசிப்புடன் நட்டுவனார்கள். பதம் பாட, தேவதாசியர் நடனம் ஆட... அவற்றை ரசித்தபடி இறைவன் பள்ளியறைக்குப் புறப்பாடு ஆகிச் செல்வார். ஆக, ஆடல் பாடல் கலையாகவே அது நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. பின்னர் முகவீணை இசை மட்டுமே நிரந்தரமானது,
ஒரு சில கோவில்களில்...: முகவீணை சுதி அதிகம் என்பதால் அதை வாசிப்பது மிகவும் கடினம். இன்றைய நிலையில், நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் மட்டுமே முகவீணை புழக்கத்தில் இருக்கிறது. இது சிறிய மேளம் என்று அழைக்கப்படுகிறது. தவிலுடன் கூடிய நாகசுரம் பெரிய மேளம் எனக் குறிப்பிடப்படுகிறது.
மயிலாப்பூரில்...: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கலியபெருமாள் என்ற இசைக் கலைஞர் முகவீணையை வாசித்து வருகிறார். திருமெய்ஞானம் சண்முகசுந்தரம் பிள்ளை என்பவரிடம் 10 ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற இவர், மயிலாப்பூரில் பங்குனிப் பெருவிழாவின் இறுதி நாளன்றும், சித்திரையில் நடக்கும் வசந்த விழாவிலும் முகவீணை வாசிக்கிறார்.
இரு விழாக்களில்...: பங்குனிப் பெருவிழாவின் இறுதி நாளில் கொடியிறக்கத்திற்கு முன்பாக ராவணேஸ்வர வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதியுலா நடக்கும். இது ஆகமங்களில் மவுனோற்சவம் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது இந்த வீதியுலாவில், நாகசுரம், தவில் என எந்த வாத்தியமும் இடம் பெறாது. இவற்றிற்குப் பதிலாக முகவீணை மட்டும் வாசிக்கப்படும். வசந்த விழாவில், கோவிலுக்குள் செயற்கையாக அமைக்கப்படும் சிறிய குளத்தை சுவாமியும், அம்மனும் வலம் வருவர். மொத்தம் 5 சுற்று வலங்களில் ஒரு சுற்றில் முகவீணை வாசிக்கப்படும்.
தெருக்கூத்தில் முகவீணை: சில இடங்களில், துக்க வீடுகளில் முகவீணை வாசிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிரபல கலையான தெருக்கூத்தில் முகவீணைக்கு இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முகவீணை போன்று மறையத் துவங்கியுள்ள இசைக்கருவிகள் புத்துயிர் பெற வேண்டும் என்றால் இவற்றை இசைக்கும் கலைஞர்களுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். அப்போது எஞ்சியிருக்கும் பழமையான வாத்தியங்களை காப்பாற்ற முடியும்.
நாட்டுப்புற வழக்கில் இதற்கு கட்டைக்குழல் என்றும் பெயர் உண்டு. ஒரு காலகட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை வட்டாரங்களில் கட்டைக்குழல் கொண்டு நிகழ்த்தப்படும் நாட்டுப்புற ஆடற்கலை நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. அப்போது தவில், பம்பை, உருமி போன்ற தோலிசைக் கருவிகளோடு கட்டைக்குழல் எனப்படும் முகவீணையும் வாசிக்கப்பட்டுள்ளது.
இக்கருவியின் அனசுப்பகுதி வெண்கலத்தால் ஆனது. அதன் சீவாளி பனை ஓலையால் செய்யப்பட்டிருக்கும். முகவீணை பின்புறம் உள்ள அனசு, மா, பலா, வேம்பு போன்ற மரங்களால் செய்யப்படுகிறது. நீளமான தண்டுப்பகுதி செய்ய கருங்காலி மர ரகங்களில் ஒன்றான ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. நன்கு நீர் வற்றிப்போன மரங்களே முக வீணை செய்யத் தகுந்தவை. நாதஸ்வரத்தைவிட வாசிக்க மிகவும் சிரமமானது முகவீணை! கும்பகோணம் அருகே நரசிங்கம் பேட்டை  கிராமத்தில் நாகஸ்வரம் தயாரித்துத் தரும் குடும்பத்தினர் கேட்டால் முகவீணையும் செய்து தருகின்றனர்.

No comments:

Post a Comment